
இந்து மதத்துக்கு எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது திமுக. அதையெல்லாம் இப்போ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்று ஏன் நினைக்கிறோம் என்று திமுகவின் வரலாற்றை மட்டுமே பார்ப்போம்.
1.எந்த ஒரு இந்துப் பண்டிகைக்கும் அவர்கள் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற பண்டிகைகளுக்கும் அதே வரைமுறையை வைத்திருந்தால் இது தவறாகத் தெரியாது. ஆனால் கிருஸ்துவ பண்டிகைகளுக்கும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் விழுந்து விழுந்து வாழ்த்து சொல்லியும் அப்பண்டிகை விழாக்களிலும்கலந்து கொண்டு தாங்கள் ஒன்னுக்குள்ள ஒன்னு என்று முக்கியமாக திமுக தலைமை காட்டிக் கொள்ளும்போது இந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது. நாங்கள் இது நாள் வரை கவனித்து வந்த இந்த விஷயத்துக்கு தற்போதைய தலைவரான ஸ்டாலின் என்ன பதில் வைத்திருக்கிறார்?
2. சில மாதங்கள் முன் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் போகவில்லை. ஆனால் அர்ச்சகர்கள் அவரை தெருவில் சந்தித்து பிராசதங்களை அருளினர். அதில் ஓர் அர்ச்சகர் அவர் நெற்றியில் குங்குமம் இட்டார். அதை அந்த அர்ச்சகர் முன்னிலையிலேயே அழித்தார் ஸ்டாலின். இந்த செய்கை என்ன சொல்கிறது? நிற்க! இதே ரம்ஜான் பண்டிகையில் குல்லா போட்டுக் கொண்டு தானே நோம்புக் கஞ்சியை குடிக்கிறார்?
3. கலைஞர் தொலைக்காட்சி திமுகவின் தொலைக்காட்சி நிறுவனம் தானே? அதில் இந்துப் பண்டிகை நாட்களில் உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளை விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று குறிப்பிடுவது ஏன்? பண்டிகை பெயரைக் கூட அறிவிக்காமல் ஆனால் பண்டிகை நாட்களில் இந்து மக்கள் அவர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து விளம்பரதாரர் மூலம் பணம் ஈட்ட முற்படுவது மட்டுமே குறிக்கோள். இதையும் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
4. பிரதமர் மோடி தசரா விழாவில் கலந்து கொண்டது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார். அதே கேள்வி அவருக்கும் ஸ்டாலினுக்கும் பொருந்தும் தானே? அவர் கிருஸ்துவ இஸ்லாமிய பண்டிகைளில் மட்டும் கலந்து கொண்டது/கொள்வது ஏன்? அந்த மத சார்புடையவர்கள் என்பதாலா? ஏன் இந்துப் பண்டிகை விழாக்களில் கலந்து கொள்வதில்லை? இந்து மத விரோதி என்பதாலா?

5. 24.10.02 பத்திரிகை செய்தியில், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகமாக கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் கருணாநிதி இந்துக்கள் என்பதற்கு திருடர்கள் என்ற அர்த்தம் உண்டு என்று பேசினார் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்து மதத்தை பின்பற்றும் பக்தர்களை இப்பேச்சு புண்படுத்தும் என்று அவருக்குத் தெரியாதா? அவர் மேல் கௌதமன் என்று ஒருவர் வழக்குத் தொடுத்ததால் உடனே தன் பேச்சு சாதுர்யத்தால் இந்துக்களை உள்ளம் கவர்ந்த திருடன் என்று கூறியதாக பின் வாங்கினார்.
6. பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் தீ மிதித்ததற்காக அந்தியூர் செல்வராஜ் என்ற திமுக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கிய கருணாநிதியை,
– தன்னை வரவேற்க வந்த தொண்டனின் நெற்றில் தீற்றிய குங்குமம் இருப்பதைக் கண்டு, “என்னய்யா, நெற்றியில் இரத்தம்” என்று கிண்டலடித்த கருணாநிதியை இந்து மத விரோதி என்று நினைக்காமல் வேறு எப்படி நினைப்பது?
7. 2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது சேது பாலத்தை இடிக்கக் கூடாது என்று பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போது இராமர் எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் படித்து அந்தப் பாலத்தைக் கட்டினார் என்று கேள்வி எழுப்பினார். மத நம்பிக்கைகளில் மற்ற மதத்தினரை இவ்வாறு கேலி செய்து அவர் கேள்வி எழுப்பியுள்ளாரா? இந்த நடத்தையை இந்து விரோத செயலாகப் பார்க்காமல் வேறு எப்படி பார்ப்பது?
8. கலைஞரின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி, திருப்பதி கோவிலுக்கு சென்ற போது கோவிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல் அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியலை பாதுகாப்பாரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்?. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா? என்று கேள்வி எழுப்பினார். இதே கேள்வியை உண்டிக் குலுக்கும் மற்ற மதத்தினரிடம் கேட்பதில்லையே அது ஏன்?
மத ஒற்றுமையை சீர்குலைக்கும் திமுக
தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக விளங்குகிறது. இங்கு கிறிஸ்துமஸ் விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும், ரம்ஜானில் கிறிஸ்தவர்களும், இந்துக்களும், இந்துக்களின் பண்டிகைகளில் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கலந்து கொண்டு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். கல்தோன்றி மண் தோன்றா மூத்த தமிழ்குடி என்பர். உலகிற்கு அனைத்து வகைகளிலும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள். இன்று விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் பங்கு அதிகம். உலக நாடுகளில் இந்தியர்களில் பெரும்பாலும் தமிழர்கள் பணியாற்றாத இடமே இல்லை எனலாம். அந்தளவிற்கு இந்தியர்கள் திறமை படைத்தவர்கள்.
இந்து மக்களுக்கு அவமரியாதை
மேலும் சாஸ்திர, சம்பிரதாயங்கள், சடங்குகள், ஜோதிடம், எண் கணிதம் ஆகியவற்றை உலகிற்கு அறிமுகம் செய்தவர்களும் இந்துக்கள்தான். இவ்வாறு உலகம் முழுவதும் முக்கியமான பணிகளில் பங்கு வகிப்பவர்கள் இந்துக்கள். இந்து மதம் போதித்துள்ள நற்சிந்தனைகள் ஏராளம். இவ்வாறு பழமைவாய்ந்த இந்து மதத்தை பல்வேறு நாட்டினரும் வியந்து போற்றுவதுடன் பலர் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தொன்மைவாய்ந்த பெயர் பெற்ற இந்து மதத்தை உலக மக்கள் அனைவரும் போற்றி புகழும் நிலையில் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தற்போதைய தலைவர் ஸ்டாலினும் அவமதித்து வருவதை கண்ணுற்று வருகிறோம் என்பதே உண்மை நிலை.
~பல்லவி
சில சில தர்மங்களும் , சில நியாயங்களும்