
மூன்றாம் பாலினத்தவர் — பிறப்பில் இருக்கும் பாலினத்துக்கு எதிர்ப்பாலினமாக மாறுவது. இது ஒரு இயற்கைப் பிறழ்வு, ஜீன்களில் பிரதியெடுப்பதில் உண்டாகும் கோளாறு என்றெல்லாம் சொல்கிறார்கள். இது ஒரு சாபமோ அல்லது மனநோயோ கிடையாது. இயற்கையின் ஒரு நிகழ்வு மட்டுமே. ஒரு ஆண் முழுசாகப் பெண்ணாக மாறுவதும் ஒரு பெண் முழுசாக ஆணாக மாறுவதும் சுலபமாக நடக்க வேண்டிய விஷயம். மனித இனத்தில் மட்டும் இந்த மாற்றம் கஷ்டமானதாக இருக்கிறது. நம்ப முடியவில்லையா? அது எப்படிங்க ஆண் பெண்ணாக மாறுவதும் பெண் ஆணாக மாறுவதும் சுலபமான விஷயமாக எப்படி இருக்க முடியும்னு கேக்கறீங்களா?
ஆப்ரிக்காவில் ஒரு தவளையினம் வெய்யில் காலம் வருமுன்னர் பூமியில் தங்களைப் புதைத்துக் கொண்டு நீள்துயில் கொள்கின்றன. மழைக்காலம் வந்ததும் பூமி நனைந்தவுடன் மெள்ள வெளியே வருகின்றன. வரும்போது என்ன ஆகும் தெரியுமா? இரண்டு தவளைகள் அருகருகே வெளிவரும்போது பெரிய தவளை ஆணாகவும் சிறிய தவளை பெண்ணாகவும் உருவெடுக்கிறது. அடுத்த வருடம் எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். இந்த மாற்றம் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. அதே போல சாலமன் மீன்களிலும் இத்தகைய மாற்றம் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. இங்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. பார்க்கப் போனால் மனிதன் உள்ளிட்ட எல்லா ஜீவராசிகளும் தண்ணீரில்தான் தோன்றின என்பார்கள். இந்தப் பால்மாறும் குணத்தை இன்னும் தக்க வைத்திருப்பது தண்ணீரோடு சம்மந்தமுள்ள மீனும் தவளையும்தான். எல்லாம் சரிதான், இந்தத் தவளைகள் எதற்கு பூமிக்கடியில் போக வேண்டும்? கடுங்கோடைக்காலத்தை சமாளிக்கதான். இது மாதிரி துருவக்கரடிகள் கடுங்குளிர் காலத்தில் பனிக்கட்டியின் அடியில் நீள்துயில் கொள்கிறது. இது எல்லா விலங்குகளுக்கும் முடியுமா என்றால் இல்லை என்பதுதான் பதில். மனுஷனுக்கு நிச்சயமா முடியாது. விலங்கினத்துக்கே ராஜாவான சிங்கம்? கோடைக்காலத்தில் பூமிக்கு அடியில் போக முடியாது. எங்காவது நிழல் கிடைக்குமா என்று அலையும். ஆனால் மழைக்காலத்தில்? மலைகளுக்கு அருகில் வாழும் சிங்கங்கள் குகைகளில் ஒளிந்து கொண்டு மழையை எதிர்கொள்ளும். கொஞ்சம் மழை நின்றவுடன் பசியுடன் வேட்டைக்குக் கிளம்பும். உங்களுக்குத்தான் தெரியுமே… ஆண் சிங்கம் பெரிசா வேட்டையாடாது. மொதல்லே குனிஞ்சு பெரிசா ஒரு குரல் விடும். அந்த கர்ஜனையைக் கேட்டதும் எல்லா விலங்குகளும் தலைதெறிக்க ஓடும். அப்போ எந்த விலங்கு எங்கே இருக்குன்னு நோட்டம் பாத்துட்டுப் பொதுவா பெண் சிங்கங்கள் வேட்டைக்கு ஓடும்.
இதைத்தான் ஆண்டாள் பாடுகிறாள் –
மழைக்காலத்தில் குகையில் புகுந்து கொண்ட சிங்கம் தனது பொறி பறக்கும் கண்களுடன் வெளியே சோம்பல் முறித்து கர்ஜிக்கும். அது போல நீயும் சிங்கம் போல வெளியே வா. எங்களைப் பற்றி கேட்டு எங்களுக்கு அருள் செய்வாய் என்று பாடுகிறாள் ஆண்டாள்.
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.
#23மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்