
நண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே வழக்கம்போல கோபாவேசத்துடன் வந்தார்.
“ பொதுக்கூட்டம் போட்டு பேசற அளவுக்கு பெரிய ஆளாயிட்டாங்களோ?”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னங்க ஆச்சு என்று கேட்டேன்.
“நேத்தைக்கு நங்கைநல்லூரிலே பிராமணர் சங்கம் பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு தைரியம் வந்துடிச்சா ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு? இருக்கட்டும். இன்னும் எத்தனை நாளைக்குன்னு பாக்கறேன்” மூச்சு ஏறி இறங்கியது நண்பருக்கு.
“எதுக்கு கண்டனம் தெரிவிச்சாங்களாம் பிராமணர் சங்கத்தினர்?”
“யாரோ ஒரு பிராமணனைப் பத்தி தப்பா பேசிட்டாராம். அதை எதிர்த்து கண்டனக் கூட்டமாம். அவரு என்னா இவங்களை மட்டுமா தப்பா பேசினார்? இன்னாத்துக்கு இவனுங்க இப்படி குதிக்கிறானுங்க?”
நான் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தேன்.
“என்னா சிரிக்கிறீங்க?”
“இல்லே, இங்க கெடந்து குதிக்கறதுக்குப் பதிலா நங்கைநல்லூருக்கே நேரிலே போயி அங்கேயே உங்க எதிர்ப்பைத் தெரிவிச்சிருக்கலாமே?”
“இல்லே டோலர், நேத்தைக்கு வண்ணாரப்பேட்டை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சு பேசறதுக்குப் போயிருந்தேன்”
வகையாக மாட்டியது தெரியாமல் வசமாக சிக்கினார் டோலர்.
“ ஏன் நண்பரே, முந்தாநேத்து உங்க வீட்டு வாசல்லே ஒரே சண்டையா இருந்ததே. என்ன ஆச்சு?”
நண்பருக்கு ஒரே சந்தோஷமாயிற்று. அவர் ஜெயித்த ஒரே சண்டை. இதை நேத்தைக்கே ஃபேஸ்புக்கில் கூடப் போட்டு விட்டார்.
“அதில்லே டோலர், எங்க தெருவுக்கான தண்ணீர் தொட்டி எங்க வீட்டு வாசல்லே வெச்சிருக்காங்க. அதனால அதோட சாவி எங்க பொறுப்புல இருக்கு. அதுல பாருங்க ஒரு வாரமா ஒரு பொம்பளை வந்து எங்க வீட்டம்மாகிட்டே சாவி வாங்கி தண்ணி பிடிச்சுட்டுப் போவுது”.
“இதிலென்ன சண்டை வந்தது?”
“இருங்க டோலர், எங்க வீட்டம்மா ரொம்ப உசாரு. ஏங்க, அந்தப் பொம்பிளை நம்ம தெரு மாதிரி தெரியலே, கொஞ்சம் என்னான்னு பாருங்கன்னு சொன்னாங்க. அப்புறம்தான் தெரியுது அந்தப் பொம்பிளை ரெண்டாவது தெருவிலேர்ந்து வந்து எங்க தெரு தண்ணி தொட்டிலே தண்ணி பிடிச்சுட்டுப் போவுது”
“தண்ணிதானங்க. போவுது” என்றேன்.
“அதானே பாத்தேன், ஒரு வந்தேறி இன்னொரு வந்தேறிக்குத்தானே சப்போர்ட் பண்ணுவீங்க. எங்க தெரு தண்ணி தொட்டி எங்க தெருவிலே இருக்கவங்களுக்கு மட்டும்தான். அடுத்த தெருவிலே இருக்கவனெல்லாம் பிடிச்சுட்டுப் போக நான் என்னா இளிச்சவாயனா? நான் பொறுப்பிலே இருக்க வரைக்கும் அடுத்த தெருவிலேர்ந்து ஒரு ____யும் தொட்டியாண்ட விடவே மாட்டேன்”
நண்பர் பெருமையாக மீசையைத் தடவிக் கொண்டார்.
“சரி நண்பரே, வண்ணாரப்பேட்டை போராட்டம்னு சொன்னீங்களே, அது என்னா?”
“அதுவா டோலர், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்த இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை கொடுக்க வேண்டும், இது இல்லாத குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அப்டீன்னு வண்ணாரப்பேட்டையிலே இஸ்லாமியர்களோட பெரிய போராட்டம் பத்து நாளைக்கும் மேலே நடக்குது. அங்கே என்னோட ஆதரவைத் தெரிவித்துப் பேசப் போயிருந்தேன். மதவாத பாஜகவின் தந்திரம் இந்த மண்ணிலே பலிக்காது”
நண்பர் கெத்தாக என்னைப் பார்த்தார்.
“ஏன் நண்பரே, நீங்களும் வந்தேறியா?” என்றேன்.
நண்பருக்கு முகம் சிவந்தது. “யாரைப் பாத்து கேக்கறீங்க?”
“இல்லே நண்பரே, அடுத்த தெருவிலே இருக்க பெண் உங்க தெருவிலே தண்ணி பிடிக்க வந்தா கோபம் பொத்துக்கிட்டு வருது. நான் பொறுப்பிலே இருக்க வரைக்கும் அடுத்த தெருவிலேர்ந்து ஒருத்தரையும் விட மாட்டேன்னு சொன்ன அதே வாய்தான் பங்களாதேஷ் பாக்கிஸ்தான்லேர்ந்து வந்தவனுக்கெல்லாம் குடியுரிமை குடுக்கணும்னு சொல்லுதே. அதான் கேட்டேன் நீங்களும் வந்தேறியான்னு. நீங்கதானே சொன்னீங்க ஒரு வந்தேறி இன்னொரு வந்தேறிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவான்னு. அதான்”
நண்பரின் கன்னத்தில் எப்படி வந்ததென்று தெரியவில்லை – நான்கு விரல்களின் தடம் தெரிந்தது. கோபமாக திரும்பிப் போய்விட்டார்.
நண்பர் கதைகள் – தொடரும்
ஸ்ரீஅருண்குமார்