
பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைத்துக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைத்துக் கொள்வதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாயைக் குறைத்துக் கொள்ளும் என்றும் இதனால் மொத்தத்தில் லிட்டருக்கு இரண்டரை ரூபாய் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளும் மதிப்புக் கூட்டுவரியைக் குறைப்பதன்மூலம் இதே அளவுக்கு விலைக்குறைப்பு அளிக்க வகை செய்ய வேண்டும் என்றும் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார். இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.